2012-11-11

லர் ட்டை: 1


          மிழில் நாத்திகம் பற்றி எழுதப்பட்டிருந்தாலும், நான் தேடியவரை, செருப்படிச் சிந்தனைகளே அதிகம் தென்படுகின்றன.

செருப்படிச் சிந்தனை? உங்களுக்குத் தெரிந்திருக்கும் எனினும், அடையாளம் காட்டுகிறேன். கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி, கடவுள் சிலையை உடை, பார்ப்பனப் பீடைகள் போன்ற இனவெறி மற்றும் கலவரம் தூண்டும் கருஞ்சட்டைச் சிந்தனைகள். இவற்றை கொள்கை அடிப்படையாக வைத்துக் கழகங்கள் ஆட்சியைப் பிடித்து ஐம்பது வருடங்கள் போலாகின்றன. ஐம்பதாண்டுகளில் புதிய கோவில்கள் ஆயிரக்கணக்கில் வந்திருக்கின்றன. புதிய கடவுள்களும் வந்திருக்கின்றன. கண்மூடித்தனம் கூடியிருக்கிறது. நாத்திகம் இக்கழகங்களின் வாக்கு வங்கிக்கான வழியானது தவிர வேறு பயனில்லை.

போகட்டும், இது அரசியல் பற்றியத் தளமல்ல.

படிப்புக்கும் அறிவுக்கும் தொடர்பில்லை என்பதற்கானத் தலையாய உதாரணம் - கடவுள் நம்பிக்கை. 'கடவுள் எதிர்ப்பே பகுத்தறிவு' என்றப் பொய்யானப் பிரசாரத்தைத் தழுவியதால் பகுத்தறிவின் பயனே காணாமல் போய்விட்டது என்று நினைக்கிறேன். இதுவும் கருஞ்சட்டை வாதத்தின் பலன். ஒரு முற்போக்குப் பெரியவர் வகுத்தப் பெருஞ்சாத்தியப் பாதை, வெறுப்பிலும் பகையிலும் முட்டாள் நாத்திகத்திலும் முடக்கப்பட்டிருப்பது வருந்த வைக்கிறது. கருஞ்சட்டை வாதம் சிலரின் வயிற்றுப் பிழைப்பானதே தவிர வேறு பயனில்லை.

போகட்டும், இது கருஞ்சட்டை பற்றியத் தளமுமல்ல.

நான் அரசுப் பதவியை நாடவில்லை. நாத்திகம் எனக்கு வயிற்றுப் பிழைப்பல்ல. நான் ஒரு சாதாரணன். கலர் சட்டை அணிபவன். நூற்றுக்குச் சற்றே மேற்கிலான ஐக்யூ கொண்ட, சராசரிப் பகுதி நேரச் சிற்றறிவாளன். அறிவில் ஞானியல்ல, சோனி. எனினும் எத்தனையோ பேர் எழுதியதைப் படிக்கும் வாய்ப்பும், சில உண்மையான ஞானிகளுடன் பழகும் வாய்ப்பும் பெற்றவன். நினைவறிந்த நாள் முதல், சந்தேகங்கள் இருந்தாலும் என் மேல் திணிக்கப்பட்டச் சடங்கு தோய்ந்த நம்பிக்கைகளைக் கேள்வி கேளாமல் ஏற்று, பல நேரம் இணங்கியிருக்கிறேன். கடவுள் நம்பிக்கை ஒரு கேள்விக்குறியாக, தேவைக்கேற்ப வந்து போகும் வழக்கமாக இருந்தாலும், என் மனமறிந்து கடந்த பத்து ஆண்டுகள் போலவே நாத்திகம் பழகி வருகிறேன். கடவுள்/மத நம்பிக்கை, பல வகைச் சமூகக் கேடுகளின் வேர் என்று இப்பொழுதுத் தீர்மானமாக நம்புகிறேன்.

கடவுள் நம்பிக்கை, காலப்போக்கில் தானாகவே அழிந்துவிடும் என்றும் நம்புகிறேன். எனினும், அப்போக்கிற்கு என்னால் இயன்ற ஒரு சிறு அவசரத்தைப் புகுத்த விரும்புகிறேன். அறிவார்ந்தச் சிந்தனைகள் நாத்திகத்திலும் உண்டு என்பதை முன்னிறுத்த விரும்புகிறேன். அசல் நாத்திகத்தில் செருப்படி கிடையாது, பார்ப்பனர் என்றக் கூக்குரல் கிடையாது, க்ருஷ்ணன்-அல்லா-யேசு எல்லாரும் ஒருவரே என்ற வசதிக்கேற்ற உதவாக்கரை வாதங்கள் கிடையாது.. என்று அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். 'சிலையென்றால் சிலை, தெய்வம் என்றால் தெய்வம்' போன்ற சினிமாத்தனம் நாத்திகத்தில் கிடையாது என்று சொல்ல விரும்புகிறேன். 'இதுவும் கடவுள் அதுவும் கடவுள்' என்று இருப்பதையெல்லாம் கடவுள் எனும் குறிக்கோளற்ற ஆத்திகம் பற்றிச் சொல்ல விரும்புகிறேன். ஆத்திகம் பழகுவது சமூகத்துக்கு ஆபத்து என்று ஆதாரத்தோடுச் சொல்ல விரும்புகிறேன். நாத்திகம் பழகுவதால் நரகம் கிடைக்காது என்று நாலு பேருக்குச் சொல்ல விரும்புகிறேன். இது அதற்கானக் தளம்.

நான் நாத்திகன் என்பதில் எனக்கு ஒரு அச்சம் உருவாகியிருக்கிறது. நான் பழகும் சமூகத் தட்டுகளில் விவரிக்க முடியாத ஒரு ஒதுக்கலை என் பால் உணரத் தொடங்கியிருக்கிறேன். எனினும், விவரிக்க முடிகிற ஒரு விடுதலை உணர்வையும் அறிகிறேன். என் பிள்ளைகளிடமும் பிறரிடமும் இதுகாறும் சொல்லி வந்த பொய்களையும் கதைகளையும் சாக்குகளையும் இனிச் சொல்ல வேண்டியதில்லை என்ற விடுதலை. என்னையும் மனிதத்தையும் தவிர எதையுமே நம்பவேண்டியதில்லை என்ற விடுதலை. இல்லாத ஒன்றை நம்பிப் பாவ புண்ணியக் கணக்குகளையும், பிறவிக் கணக்குகளையும் கண்டு பயப்படும் பேதமை நீங்கிய விடுதலை. இது என் விடுதலைத் தேடல்களையும், விடுதலைப் போராட்டங்களையும் கொண்டாட்டங்களயும் பகிர்ந்து கொள்ள ஒரு தளம்.

நாத்திகம் பற்றி எழுதத் தொடங்கி, நிறுத்தி, மீண்டும் தொடங்கியிருக்கிறேன். நிறையச் சொல்ல விரும்புகிறேன். ஒரு புத்தகத்துக்கானக் குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறேன். எனினும், மறுதுவக்கம் என்ற என் முனைப்பிலே சோர்வின் படிமம் சேர்ந்திருப்பதையும் உணர முடிகிறது. சீரியச் சிந்தனையாளர் நண்பர் ரமணி தன் படைப்பு ஒன்றில் சொன்னது:
இரண்டு பத்திகள் எழுதியதுமே 'இது குறித்து ஆயிரம் பேர் எழுதிவிட்டார்கள்' என யதார்த்தம் லேசாய் முனங்க, 'இதை விட சிறப்பாக எனச்சொல்' என வெறுப்பேற்றுகிறது தர்க்கம்.
நாத்திகம் பற்றி நீண்டப் பதிவெழுத நினைக்கும் என் உணர்வுகளின் பிம்பம், ரமணியின் வரிகள். 'யதார்த்தமும் தர்க்கமும் படைப்புக் கர்ப்பிணியின் அரக்கத் தாதிகள்' எனும் ரமணியின் மற்றொருக் கருத்தைக் கடன் வாங்கி, என் நிலை காட்டும் கண்ணாடியாக உங்கள் முன்வைக்கிறேன்.

எனினும், 'விடப்போவதில்லை' என்றத் தீர்மானத்தின் விளைவு, இந்த முயற்சி. தனிச் சிந்தனைக்கானத் தனி வலைப்பூ. இதில் கதையுண்டு, கட்டுரையுண்டு, கவிதையுண்டு, மேற்கோளுண்டு, மொழி கடந்த சிந்தனைகளுண்டு - இவை அனைத்தையும் கட்டும் மெல்லிய கயிறு, நாத்திக இரும்பில் நெய்தது.

படிப்பவர் மனங்களில் ஆத்திகம் பற்றிய ஒரு மிகச் சிறியச் சந்தேக அலையைக் கிளப்பினாலும் அது மிகப் பெரிய வெற்றி. எனினும், அது என் எழுத்தின் நோக்கமல்ல. 'நாத்திகம் பற்றிய வெட்கம் தேவையில்லை', 'நாத்திகச் சிந்தனை இளவயதிலேயே வளர்க்கப் படவேண்டிய ஒன்று' என்ற அளவில் ஒரு தெளிவை உருவாக்குவதே என் எழுத்தின் நோக்கம்.

உடன் சிந்திக்க அழைக்கிறேன்.

► தொடர்க          


12 கருத்துகள்:

  1. புதிய சிந்தனை! புதிய கோணம்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாநவம்பர் 16, 2012

    வலைப்பூவின் பெயரே வித்யாசமாக, அட என்ன இருக்கும் இதில் என்று பார்க்க தூண்டுகிறது. வாழ்த்துக்கள்!

    நாத்திகம் பற்றிய உங்கள் கருத்து என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆவலாகத்தான் இருக்கிறது.

    //நாத்திகச் சிந்தனை இளவயதிலேயே வளர்க்கப் படவேண்டிய ஒன்று' என்ற அளவில் ஒரு சிறியத் தெளிவை உருவாக்குவதே என் எழுத்தின் நோக்கம்.//
    இது ஏன், எதனால், எதற்காக என்று நீங்கள் எழுத போவதை நிச்சயம் படிக்கிறேன். கடவுள் உணர்வு என்பது பல பேருக்கு ரத்தத்தில் ஊறிப்போன ஒரு உணர்வு. எனினும் எந்த நேரத்தில் யாருக்கு, எதனால், எப்படி மனம் மாறும் என்று ஒரு போதும் சொல்வதற்கில்லை. கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத
    விஷயங்கள் எல்லாம் நிஜத்தில் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. அதனால் இந்த தொடரை படிப்பவர்களில் ஒருவர் இந்த பாதையில்
    நுழைந்தாலும் அது எழுத்துக்கு கிடைக்கும் வெற்றிதான்.

    //அரக்கத் தாதிகள் என்னை அண்டவிடுவதில்லை என்று இப்போதைக்குத் தீர்மானித்திருக்கிறேன் :) //
    'அரக்க தாதிகள்' என்றால் யார்? புரியவில்லை.

    ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தீவிரமாக எழுத துவங்கி இருக்கிறீர்கள். அதை உங்கள் எழுத்தில் உணர முடிகிறது. உங்கள் முயற்சி எழுச்சி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. அப்பாதுரை அவர்களே! நவீன தமிழில் அறிவியல் ரீதியாக வரவிருக்கும் அற்புதமான நூலாக வர என் வாழ்த்துக்கள்---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  4. தொடர்ந்து வருக தமிழ் இளங்கோ, மீனாக்ஷீ, காஸ்யபன்... பின்னூட்டங்களுக்கு நன்றி.



    பதிலளிநீக்கு
  5. இது மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி அல்ல, மீனாக்ஷி அவர்களே. எதையும் யாரையும் மாற்றுவதென்பது முடியாத காரியம் என்பது அனுபவத்தில் பலமுறை அறிந்த உண்மை - தலையால் கல்லுடைக்கும் வேலை மிக எளிது.

    யதார்த்தம், தர்க்கம் இரண்டையும் அரக்கத் தாதிகள் என்றேன்.

    தொடர்ந்து வர வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. தற்போதைய நிலையில் அவசியத் தேவையாக
    உள்ள விஷயத்தை மிகச் சரியாகத் தொட்டிருக்கிறீர்கள்
    நிச்சயம் இந்தப் பதிவுகள் பகுத்தறிவார்களுக்கு
    ஒரு வழிகாட்டியாகவும் பக்த கோடிகளுக்கு
    நல்ல தெளிவூட்டியாகவும் இருக்கும்
    தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. உங்கள் புதிய முயற்சிக்கு பலமளிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் சகோதரா!

    பதிலளிநீக்கு
  8. இரண்டுக்குப் பின் ஒன்றினுள் வந்திருக்கிறேன். அரைத் தூக்கம் அகன்ற நிலையில். இப்ப புத்தி தயாராகிடுச்சு.

    //என் பிள்ளைகளிடமும் பிறரிடமும் இதுகாறும் சொல்லி வந்த பொய்களையும் கதைகளையும் சாக்குகளையும் இனிச் சொல்ல வேண்டியதில்லை என்ற விடுதலை. என்னையும் மனிதத்தையும் தவிர எதையுமே நம்பவேண்டியதில்லை என்ற விடுதலை. இல்லாத ஒன்றை நம்பிப் பாவ புண்ணியக் கணக்குகளையும், பிறவிக் கணக்குகளையும் கண்டு பயப்படும் பேதமை நீங்கிய விடுதலை.//

    பதிலளிநீக்கு

  9. ஓட்டு கேட்காத
    உண்டியல் குலுக்காத
    கடவுளை நேசிக்கும்
    மனிதத்தை வெறுக்காத
    கலர் சட்டை
    நாத்திகத்தை
    கைதட்டி வரவேற்கிறேன்

    பதிலளிநீக்கு
  10. வருக சிவகுமாரன்!

    இல்லாத ஒன்றை நேசிப்பது ஏமாற்றத்தை விதைப்பதாகுமே?

    பதிலளிநீக்கு
  11. இருப்பதோ இல்லாததோ நேசிப்பிற்கு ஏது எல்லை ?

    பதிலளிநீக்கு
  12. இன்னிக்குத் தான் இதைப்பார்த்தேன். தொடர்ந்து படிக்கிறேன். உங்கள் நோக்கம் நிறைவேற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு